பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அதில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டை பொதுமக்கள் உரிய கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.