வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி, அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் பதிலடி கொடுத்துள்ளது.
அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. தனது எதிரி நாடுகளான தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா – அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானமான பி1-பி விமானமும் இதில் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை தென்கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.