உலக நாடுகள் பட்டியலில் இண்டர்நெட் முடக்கத்தில் தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே இணைய தடங்கல்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்த பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 187 உலகளாவிய இணைய முடக்கங்கள் ஏற்பட்ட நிலையில் அதில் 84 முறை இணைய முடக்கம் இந்தியாவில் தான் நடந்துள்ளது என்றும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் மட்டும் 49 தடவை இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 2019ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரின் சுயாட்சியை அகற்றி இரண்டு கூட்டாட்சி நிர்வாகப் பகுதிகளாக பிரித்தது. இதையடுத்து, அங்கு நடந்த பிரச்சனைகள் காரணமாக அவ்வப்போது இன்டர்நெட் முடக்கப்பட்டது. அதாவது ஜம்மு காஷ்மீரில் 49 முறை இணைய முடக்கம் நிகழ்ந்துள்ளது. இதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கலில் 3 முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது பலமுறை இணைய முடக்கங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த ரஷ்யா படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டில் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்தது. அப்போது, அங்கு இணைய துண்டிப்பும் செய்யப்பட்டது. அதன்படி, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக உக்ரைன் நாட்டில் சுமார் 22 முறை இணைய முடக்கம் ஏற்பட்டதாகவும் தனியார் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவை அடுத்து கடந்த உக்ரைன் நாட்டில் அதிகமாக இணைய முடக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அதிகமாக இணைய முடக்கங்களை சந்தித்த ஈரானில், ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டில் 18 முறை இன்டர்நெட்டை முடக்கி வைத்ததாகவும் கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.