ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது.
ஐபிஎல் 16வது சீசனின் 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களில் நெஹல் வதேரா 64 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும், திரிஸ்தன் ஸ்டப்ஸ் 20 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 139 ரன்கள் சேர்த்தது. இந்த இன்னிங்ஸில் மும்பையால் ஒரேயொரு சிக்சர் மட்டுமே அடிக்க முடிந்தது. குறிப்பாக சென்னை அணியின் பவுலர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை திணறடித்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியபோது, தொடக்க பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னும், டெவோன் கான்வே 44 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். குறைவான இலக்கு என்பதால் சென்னை பேட்ஸ்மேன்கள் நிதானத்துடன் ரன்களை சேர்த்தனர். அஜிங்யா ரஹானே 17 பந்தில் 21 ரன்னும், அம்பதி ராயுடு 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக, தோனி வெற்றிக்கு தேவையான 2 ரன்களை அடித்து ஆட்டத்தினை முடித்து வைத்தார். ஷிவம் துபே 26 ரன்களுடம் களத்தில் இருந்தார். இறுதியாக சென்னை அணி தனது சொந்த மண்ணில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.