உக்ரைன் மீது கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் மீதான ஆக்ரமிப்பை அடுத்து ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது. மேலும், அதன் விற்பனையையும் நிறுத்தியது. ஆனால், மற்ற நாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு ஐபோன் (iPhone) மற்றும் ஐபேடு (iPad) சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே, ரஷ்ய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்களால், நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கையில், “ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷ்ய மக்களின் தகவல்கள் திருடும் ஆபத்து இருக்கிறது. எனவே, ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷ்ய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்தக் கூடாது. பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஃபோன்களையும், டேப்லெட்டுகளையும் பயன்படுத்தக் கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.