உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியில் தொடக்க வீராங்கனையான கேப்டன் அலிசா ஹீலி ஒரு ரன்னிலும், தேவிகா வைத்யா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய கிரண் நவ்கிரே 22 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா ஜோடி அதிரடியாக ஆடினர். கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், தீப்தி சர்மா 22 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் உ.பி. வாரியர்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக டிவைன் மற்றும் கேப்டன் மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் டிவைன் 14 ரன்களில் வெளியேற, மந்தனா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனையடுத்து, களமிறங்கிய பெர்ரி 10 ரன்களும், ஹீத்தர் நைட் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய கனிகா அகுஜா மற்றும் ரிச்சா கோஸ் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. கனிகா அகுஜா 30 பந்துகளில் 46 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இறுதியில் அதிரடி காட்டிய ரிச்சா கோஸ் 31 (32) ரன்களும், ஸ்ரேயங்கா பாட்டீல் 5 (3) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி 18 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.