ஈரானில் பெண்கள் தற்போது கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பதால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு வருவதால் ’ஹெல்ப் டு ஈரான்’ என்ற வாசகம் வைரலாகி வருகின்றது
ஈரானில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி 22 வயதான மாஜா அமினி என்ற பெண் தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தங்கள் முடியை வெட்டிக் கொண்டும் போராட்டம் நடத்தினர். வீதிகளில் கலவரம் மூண்டது. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் போது கடும் வன்முறை வெடித்துள்ளது.
இதில் இதுவரை 30க்கும் மேற்படடவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.இந்நிலையில் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதாகவும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு பொதுமக்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாகவும் டுவிட்டரில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இன்டெர்னெட் தொடர்பு ஈரானில் துண்டிக்கப்பட்டு வருவதால் மக்களுக்கு பாதுகாப்பு தேவை என குரல் எழுந்து வருகின்றது. கடந்தமுறை நடந்த ஒரு போராட்டத்தின்போது இன்டெர்னெட் துண்டிக்கப்பட்டபின்னர் சுமார் 1500 பேரை அரசு சுட்டுக் கொன்றதாக இணையதளத்தில் பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனவே ஈரானிய மக்களுக்கு உதவ வேண்டும் என குரல் எழுந்து வருகின்றது.
இதனிடையே பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகளும் தற்போது வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது.