ரேஷன் கடைகளில் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 194 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..
கூட்டுறவு, உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஏழை, எளிய மற்றும் நடுத்தா குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் தமிழக அரசு, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-இன்படி வழக்குப்பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980-இன்படி தடுப்புக் காவலில் வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 15.08.2022 முதல் 21.08.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் ரூ.10,06,830 மதிப்புள்ள 1782 குவிண்டால் அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அக்குற்றச் செயலில் ஈடுபட்ட 194 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.