டெல்லி, எஃப்-16 போர் விமானங்களை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க அறிவித்துள்ளதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கிய சக்தி வாய்ந்த எஃப்-16 போர் விமானங்களை மேலும் மேம்படுத்த ரூ.3,500 நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தீவிரவாதத்தை காரணம் காட்டி பாகிஸ்தானை கண்டு கொள்ளாதிருந்த அமெரிக்கா திடீரென நெருக்கம் காட்டுவது ஆசிய நாடுகளின் கவனத்தை திருப்பியுள்ளது. உக்ரைன் மீது போர்தொடுத்த ரஷ்யாவுடன் நட்புறவை இந்தியா துண்டிக்க மறுத்ததால் இந்தியாவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்க அமெரிக்கா நினைக்கிறதா?என கருதப்படுகிறது. உக்ரைன் மீது போர்தொடுத்த ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.
அமெரிக்காவுக்கு ஆதரவாக, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி போன்ற பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. அந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால் உக்ரைன் மீதான போரை இந்தியா விமர்சித்தாலும், ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச தளங்களில் அமெரிக்கா போன்ற நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களை இந்தியா ஆதரிக்க வில்லை.
மேலும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளையும் மீறி இந்தியா எரிபொருட்களை ரஷ்யாவிடம் வாங்கி வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் பாகிஸ்தான் ஆதரவு நிலையை கையில் எடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதிகின்றனர்