முடி கொட்டுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞருக்கு தொற்று ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஆதர் ரஷீத் (30) என்ற இளைஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக காணப்பட்டுள்ளது. எனவே, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்னர் சில நாட்களில் அதிகமாக காணப்பட்டதால் இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்தாண்டு முடி மாற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்த ரஷீத், அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இவருக்கு செப்சிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த காயங்கள் ஆறாமல் அழுகி அதிலுள்ள பாக்டீரியாக்கள் மூலம் நச்சுத்தன்மை உருவாகி அது ரத்தத்தில் கலந்துள்ளது. இதனால், அவரது சிறுநீரகம் செயலிழந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக இவரது மற்ற உடல் உறுப்புகளும் செயலிழக்க தொடங்கி மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த ரஷீத்திற்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.