பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தனது கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் 17 வயது சிறுமி கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது கருவை கலைக்க அனுமதி வழங்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது 19 வார கர்ப்பிணியாக உள்ளார். மைனர் சிறுமி என்பதால், அவர் குழந்தையை பெற்று வளர்க்கும் பக்குவத்தில் இல்லை. பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பமானது மனுதாரருக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்று வாதிட்டார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ”பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான பெண்ணின் கருவை கலைக்கவிடாமல் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள வைப்பது அந்த பெண்ணின் அடிப்படை மனித உரிமையையும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையையும் மீறுவதாகும். எனவே, பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான நிலையில், அந்த குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா? அல்லது கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா? என முடிவு செய்யும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளது.
மருத்துவ கருத்தரிப்பு சட்டம் பிரிவு 3(2)-ன் படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்கு மருத்துவ ரீதியாக கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது” என்று கூறி மைனர் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.