இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுமே ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக யாருக்கு என்ற போட்டியின் காரணமாக நீதிமன்றத்தில் இரு தரப்பும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பானது இரு தரப்புக்கும் சாதகமாக மாறி மாறி வருகிறது. இதனையடுத்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 17, 20 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொடக்க விழா பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இபிஎஸ் தன்னை கெளரவமாக நடத்தவில்லை. அண்மையில் டெல்லி சென்ற இபிஎஸ், அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, அவரோடு எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகம் தான் சென்றார். கட்சியின் துணை பொதுச்செயலாளரான தன்னை டெல்லி அழைத்துச் செல்லாமல், அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகத்தை அழைத்துச் சென்றுள்ளார் என கே.பி.முனுசாமி புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சி.வி.சண்முகத்துக்கு இபிஎஸ் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலே இந்த கூட்டத்தை கே.பி.முனுசாமி புறக்கணித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது கே.பி.முனுசாமி ஓபிஎஸ் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.