தமிழ்நாட்டில் சமீப காலங்களாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு பெண் பார்க்கலைன்னா கொலைச் செய்வது, பேசலைன்னா கொலைச் செய்வது, காதலிக்க மறுத்தால் கொலைச் செய்வது என்கிற போக்கு அனைத்து மாவட்டங்களிலுமே அதிகரித்துவிட்டது. ஈரோடு, திருச்சி, கோவை, விருதுநகர், மதுரை என்று எல்லா மாவட்டங்களிலுமே இது போன்ற கொலைகள் இந்த ஆண்டில் அரங்கேறிவிட்டன. குற்றம் நிகழ்ந்த பிறகு, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஊருக்கு ஊர் காவல் நிலையங்கள் வைத்திருக்கிறோம்…? குற்ற செயல்களைத் தடுத்து நிறுத்தவே காவலர்கள்.
இது காவலர்களின் கடமை என ஒதுக்கி விடவும் முடியாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பேச வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் இதுகுறித்து வழிநடத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாதி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர் கதையாக தற்போது நந்தம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரங்கிமலை பூந்தோட்டம் ஏழு கிணறு பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை பரங்கிமலை கலைஞர் நகரில் வசித்து வரும் நவீன் காதலித்து வந்துள்ளார். இருவரும் மனம் ஒன்றி காதலித்து வந்த நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவி, நவீன் உடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். விரக்தியில் இருந்த நவீன் அந்த மாணவியை தன்னுடன் பேசுமாறு தொல்லை செய்து வந்துள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் இருந்ததால் அப்பெண்ணை நவீன் கொலை செய்யத் திட்டமிட்டார்.
இதையடுத்து, ஜூலை 7ஆம் தேதி இளம்பெண் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்று விட்டு, பரங்கிமலை பூந்தோட்டம் ஏழு கிணறு தெரு வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, நவீன் அவரை வழிமறித்து வழக்கம் போல் பேச சொல்லி டார்ச்சர் செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் திடீரென நவீன் தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் சராமாரியாக குத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, மாணவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நவீன் மொபைல் எண்ணை வைத்து டிரேஸ் செய்து, அவர் இருக்கும் இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் போலீஸ் வருவதை அறிந்த நவீன் அங்கிருந்தும் தப்பி ஓடத் தொடங்கினார். சினிமா பாணியில் 3 கிமீ தூரம் வரை விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.