கோவை மாவட்டத்தில், நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாளை ஜூன் 26ஆம் தேதி திங்கட்கிழமை முதல் காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை ஆகிய 3 துறைகளின் அலுவலர்களும் ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் முழுவதுமாக பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் அதிகப்படியாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், இருசக்கர வாகன விபத்துக்களில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர். விபத்து காலத்தில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணியாத நிலையில், அவர்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர். விபத்துக்களை தடுக்கும் வகையிலும், விபத்து நேர்கையில் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை கோவை மாநகரில் 100% செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை ஜூன் 26ஆம் தேதி முதல் கோவையில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர், இருசக்கர வாகனத்தில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ஒருவார காலததுக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.