திருவண்ணாமலைக்கு அருகே உள்ள டி.கல்லேரி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது பற்றி யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார்.
ஆனால், இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்ததால், இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், அதன்படி தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஆசிரியர் லட்சுமணனை தேடி வந்த நிலையில், தற்போது பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் லட்சுமணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார் .