தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில், தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தவகையில், கடந்த 19ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 20ஆம் தேதி 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் பள்ளி கல்வித்துறை முக்கியமான ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பள்ளிகள் மீண்டும் திறந்த பின் காலாண்டு தேர்வு வரை தொடர்ந்து சனிக்கிழமை பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”ஏற்கனவே விடப்பட்ட விடுமுறைகளை கணக்கில் வைத்து சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இப்போது மேலும் வரும் விடுமுறைகளை கணக்கில் வைத்து கூடுதலாக மேலும் சில சனிக்கிழமைகள் விடுமுறையை ரத்து செய்வோம். எவ்வளவு மணி நேரம் இழக்கப்பட்டு உள்ளதோ அதை வைத்து கூடுதல் சனிக்கிழமையை பணி நாட்களாக அறிவிப்போம் என்று கூறுகின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.