கேரளாவில் பரவி வரும் நிஃபா வைரஸ் ‘பங்களாதேஷ் வேரியன்ட்’ (Bangladesh Variant) எனப்படும் மிக அபாயகரமான தொற்று எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நிஃபா வைரஸ் பரவி, பலரின் உயிரை காவு வாங்கியது. இதையடுத்து, தற்போது மீண்டும் நிஃபா வைரஸ் பரவ தொடங்கி இருக்கிறது. இந்த வைரஸால், 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது புதிதாக 4 பேர் நிஃபா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே பெரிய அதிர்ச்சி தரும் செய்தி தான் என்றாலும், தற்போது அதை விட அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இது ஏற்கனவே வந்து சென்ற நிஃபா வைரஸ் கிடையாதாம். இது ‘பங்களாதேஷ் வேரியன்ட்’ என்று அழைக்கப்படும் மிக அபாயகரமான தொற்றாம். இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று அறிவித்துள்ளார்.
இந்த ‘பங்களாதேஷ் வேரியன்ட்’ நிஃபா தொற்று, அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீரியம் கொண்டதாகும். இப்போதைக்கு கோழிக்கோடு மாவட்டம் தான் நிஃபா வைரஸின் மையமாக இருக்கிறது. கோழிக்கோட்டை விட்டு நிஃபா வெளியே பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.
அதீத காய்ச்சல், தலை வலி, தொடர் இருமல், தசை வலி, மூச்சு விடுவதில் சிரமம், தலை சுற்றல் ஆகியவை நிஃபா வைரஸின் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில், நிஃபா வைரஸுக்கு மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டறியப்படவில்லை. ஆரம்ப அறிகுறிகளிலேயே சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தடுக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.