இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில், இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட் இஓஎஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம். பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். மேலும், இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுண்ட்டவுன் நேரத்தில் பாய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி 1 ராக்கெட் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், EOS 2 மற்றும் அசாதிசாட் சிக்னல் இஸ்ரோவுக்கு கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், விண்ணுக்கு அனுப்பப்பட்ட இஓஎஸ்-02 மற்றும் ஆசாதிசாட்டின் சிக்னல் கிடைக்கவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தரவுகளை மீட்கும் பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.