முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; 2020 – 21-ம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ம் தேதி வெளியிடப்பட்டன. தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிப்பின்போது முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான கல்வி தகுதிகளை தமிழ் வழியில் பயின்றுள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் பொழுது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தமிழ் பயின்றதற்கான சான்று 11 மற்றும் 12-ம் வகுப்பு டிப்ளமோ படிப்பு தமிழில் பயின்றதற்கான சான்று, இளங்கலை பட்டத்தினை தமிழில் பயின்றதற்கான சான்று முதுகலை பட்டத்தினை தமிழில் பயின்றதற்கான சான்று, கல்வியியல் இளங்கலை பட்டத்தினை பி.எட் தமிழ் பயின்றதற்கான சான்று கல்வியியல் முதுகலை பட்டத்தை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று உரிய அலுவலரின் மேல்லோப்பத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள படிவத்தில் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் ஏற்கனவே தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை ஆம் என பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும். எனவே மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இந்த வசதியினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை https://trbpg2021.onlineregistrationform.org/TRBPGCT/ என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.