கூகுள் மேப்-ஐ நம்பி சென்ற ஒருவர், ஓசூரில் குடும்பத்துடன் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநில எல்லையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, சந்தாபுரா, ராம்சாக்ரா, முத்தாநல்லூர், பிதுருக்குப்பே உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து தமிழக எல்லையான ஓசூர் பகுதியை நோக்கி வருகிறது. அவ்வாறு வரும் வெள்ள நீர் தமிழக எல்லையில் உள்ள சாக்கரை ஏரி நிரம்பி பேகேப்பள்ளி கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. தரைப்பாலத்தின் மேல் அதிகளவு வெள்ளநீர் செல்வதால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் சர்ஜாபூரை சேர்ந்த ராகேஷ் என்பவர் அவரது குடும்பத்துடன் நள்ளிரவில் சொகுசு காரில் ஓசூரில் இருந்து சர்ஜாபுரம் செல்ல ‘கூகுள் மேப்’ உதவியுடன் சென்றுள்ளார். அப்போது கூகுள் மேப் பேகெப்பள்ளியில் தண்ணீரில் மூழ்கிய தரைபாலத்துக்கு மேலே அழைத்துச் சென்றுள்ளது. மேப்-ஐ நம்பி தரைப்பாலத்தின் நடுவில் அவர் சென்றபோது, கார் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டு நின்றுவிட்டது. இதனால், என்ன செய்வது என்று தெரியாத அவர்கள் சற்று சுதாரித்துக் கொண்டு நம்பர் 100க்கு கால் செய்து உதவி நாடியுள்ளனர்.

இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், அப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் முரளி ஆகியோர் விரைந்து சென்று ஜேசிபி மற்றும் கயிறு கட்டி சென்று முதலில் காரில் இருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். பிறகு வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட காரையும் மீட்டனர். கூகுள் மேப்-ஐ நம்பி சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய சம்பவம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர்கள் மீளாமல் இருக்கின்றனர்.