வருமானம் இல்லாவிட்டாலும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2015இல் திருமணம் செய்து கொண்டனர். 2016இல் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்பதாக மனைவி போலீசில் புகார் அளித்தார். அத்துடன் அந்தப் பெண் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சமாக ரூ.2 ஆயிரம் வழங்க கணவருக்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கணவர் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிரேணு அகர்வால் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “எனது மனைவி பட்டப் படிப்பு படித்துள்ளார். மாதம் ரூ.10,000 சம்பாதிக்கிறார். கூலி வேலை செய்து வரும் நான் இப்போது உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன். வாடகை வீட்டில் வசித்து வரும் நான் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன்.
இந்த நிலைமையில் மாதம் ரூ.2 ஆயிரம் தன்னால் வழங்க முடியாது” என்று கணவர் தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி, கணவரின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், ”மனைவி சம்பாதிக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை கணவர் தாக்கல் செய்யவில்லை. உடல் ஆரோக்கியமுடன் உள்ளதால் தான், உடல் உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் தகுதி கணவருக்கு உள்ளது. எனவே, வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது அவரின் கடமை” என்று தெரிவித்தார்.