கருவை கலைப்பது தொடர்பாக அந்த பெண் தான் முடிவெடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
தனது கருவில் உள்ள குழந்தை உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் பிறக்கும் என்று ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்ததை அடுத்து, பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற முடிவுகளை எடுப்பது சம்மந்தப்பட்ட பெண்ணின் உரிமை என்றும், அந்த முடிவை அவர் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது..

மேலும் “ மனுதாரரின் கருவில் உள்ள குழந்தைக்கு மரபணு தொடர்புடைய மூளை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. எனவே அவர் எத்தனை மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்பது ஒரு பொருட்டல்ல. தனது கர்ப்பத்தை தொடரலாமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.. அவருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது.. இது மருத்துவ வாரியத்தின் உரிமையல்ல..” என்று தெரிவித்தனர்..
அப்பெண் கருவை கலைக்கக் கூடாது என்ற மருத்துவக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்த நீதிபதிகள் “ கால தாமதத்தின் அடிப்படையில் மட்டுமே கர்ப்பத்தை கலைக்க மறுப்பது தாயின் எதிர்காலத்தை பாதிக்கும்.. அது பெற்றோரின் ஒவ்வொரு நன்மையையும் நிச்சயமாக பறித்துவிடும்.. இது மனுதாரரின் கண்ணியம் மற்றும் இனப்பெருக்கம் மற்றும் முடிவெடுக்கும் தன்னாட்சி உரிமையை மறுக்கும் செயலாகும்.
இந்த பிரசவத்தின் முடிவில் சாதாரண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் சாத்தியம் இல்லை என்பது தாய்க்கு இன்று தெரியும். அதனால் அவர் அதனை கலைக்க அனுமதி கோருகிறார்.. எனவே மனுதாரர் 32 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது..” என்று தெரிவித்தனர்..