கொரோனா என்ற பெயரை கேட்டதும் அலராத நபர்கள் யாருமே இருக்க முடியாது. 21ஆம் நூற்றாண்டில் பேரழிவை ஏற்படுத்திச் சென்ற வைரஸ் தான் கொரோனா. பல கோடி பேரை வீட்டிற்குள், மருத்துவமனையில் முடக்கி போட்டது. லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு லாக்டவுன் என்ற பெயரில் உலகின் வாழ்க்கை முறையே மாறிப் போனது.
அதேசமயம் சர்வதேச அளவில் கொரோனா தொற்று ஒரு பெரிய அச்சுறுத்தல் இல்லை. இதையொட்டி பொது சுகாதார அவசர நிலை தேவையில்லை என மே 5, 2023 அன்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், கொரோனாவின் புதிய மாதிரிகள் பல்வேறு நாடுகளில் இன்னும் ஆட்டம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் இருந்து ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, கொரோனா வைரஸின் புதிய மாதிரியான EG.5.1 மாதிரி அந்நாட்டில் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. இதை எரிஸ் வைரஸ் என்று அழைக்கின்றனர். இதன் பரவலால் கடந்த ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை பதிவான மொத்த பாதிப்புகளில் 7ல் ஒருவருக்கு எரிஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை 2-வது வாரத்தில், 11.8 சதவீதம் எரிஸ் பாதிப்பு எனக் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் திடீரென வைரஸ் பரவல் அதிகரிக்க என்ன காரணம் என ஆராய்கையில், மோசமான காலநிலை, சரியும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், பொதுஇடங்களில் மக்கள் அதிகம் கூடும் வகையில் சில நிகழ்வுகள் அரங்கேறியதும் குறிப்பிடத்தக்கது.
புதிய வகை கொரோனா வைரஸால் தலைவலி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்ற பொதுவான அறிகுறிகள் தான் தென்படுகின்றன. சர்வதேச அளவில் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் உஷாரான இங்கிலாந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக கடந்த ஜூலை 3, 2023 அன்று முதல்முறை எரிஸ் வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையின் படி, XBB.1.5 மற்றும் XBB.1.16 ஆகிய வைரஸ்களின் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர BA.2.75, CH.1.1, XBB, XBB.1.9.1, XBB.1.9.2, XBB.2.3, EG.5 ஆகிய 7 வைரஸ்கள் தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி EG.5 வகை கொரோனா வைரஸ் 45 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 4,722 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.