பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 28). இவர் மனநலம் சரியில்லாதவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இசக்கியம்மாளுக்கு கடந்த 13ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதற்கிடையே, ஆட்டோ ஒட்டுநராக உள்ள ரமேஷ், இன்று அதிகாலையிலேயே தனது பணிக்கு புறப்பட்டுவிட்டார். சவாரி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதைக் கண்டு திகைத்துள்ளார்.

இதுகுறித்து, மனைவி இசக்கியம்மாளிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லாமல் அருகில் இருந்த கிணற்றை காண்பித்துள்ளார். இதையடுத்து, கிணற்றை பார்த்தபோது குழந்தை ஒன்று மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்ட இசக்கியம்மாள் குழந்தையை கிணற்றில் போட்டு கொன்றிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.