நல்லம்பள்ளி அருகே மதுபோதையில் தகராறு செய்ததால் கணவனை இரும்பு குழாயால் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்த 43 வயதாகும் கோவிந்தன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாதம்மாள். இவருக்கு 39 வயதாகிறது. இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், நாகரத்தினம் என்ற மகளும் உள்ளனர். கட்டிடத் தொழிலாளியான கோவிந்தனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு குடித்து விட்டு முழு போதையில் வீட்டுக்கு வந்த கோவிந்தன், மனைவி மாதம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த மாதம்மாள், அடுப்பூதும் இரும்பு குழாயால் கணவனின் தலையில் பயங்கரமாக அடித்துள்ளார். இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தொப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் மாதம்மாளை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிந்தன் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால் அவரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்ததாக மாதம்மாள் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர். மதுபோதையில் தகராறு செய்த கணவனை இரும்பு குழாயால் அடித்து மனைவியே கொலை செய்த பயங்கர சம்பவம் நல்லம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.