நேற்று ஒரே நாளில் ஆவணப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மங்களகரமான நாளான பிப்.10ஆம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதலாக முன்பதிவு வில்லைகளை ஒதுக்க கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்று, ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்பட்டன.
அதேபோல், ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் வழங்க உத்தரவிட்டது. அந்த வகையில், 2024-25ஆம் நிதியாண்டில் கடந்த டிச.5ஆம் தேதியன்று ஒரே நாளில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட முன்பதிவு வில்லைகளை பொதுமக்கள் பயன்படுத்தியதன் மூலம் பிப்.10ஆம் தேதியன்று 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது” என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.