மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பிரபல இந்தி நடிகரும், சூரியாவின் அஞ்சான் பட வில்லனுமான தலிப் தஹிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து மும்பை பாந்த்ரா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பழம்பெரும் இந்தி நடிகர் தலிப் தஹில் (வயது 72). இவர் பாசிகர், ராஜா, ரா ஒன், மிஷன் மங்கல் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில் சூர்யாவின் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மும்பை கார் பகுதியில் சென்றபோது இவரது கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 2 இளம்பெண்கள் காயமடைந்தனர். நடிகர் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் தலிப் தஹில் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை பாந்திரா மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது நடிகர் மதுபோதையில் காரை ஓட்டியது ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதையடுத்து நடிகர் தலிப் தஹிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றத்தின் தன்மை மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் செய்த குற்றம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல் சட்டத்தின்படி தண்டனையும் விதிக்கப்பட்டு இருப்பதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.