இங்கிலாந்தின் மிகப்பெரிய சிறைச்சாலையான எச்எம்பி பெர்வின் சிறைச்சாலையில் சுமார் 2,100 ஆண் கைதிகள் உள்ளனர். இங்கு பாதுகாப்புப் பணிக்காக 500 காவலர்கள் உள்ளனர். இவர்களில் சில பெண் காவலர்கள், ஆண் கைதிகளுடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளனர். சிலரின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 18 பெண் காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.
விசாரணையில், கைதிகள் உள்ள செல் உள்ளே பாலியல் தொடர்பில் ஈடுபட்டது, செல்போன்கள் மூலம் நெருக்கமாகப் பேசுவது மற்றும் புகைப்படங்களை அனுப்புவது போன்ற விவரங்கள் கசிந்துள்ளன. இந்த மிகப் பெரிய சிறைச்சாலையில் இது போன்ற சம்பவம் நடந்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த சிறைச்சாலை கைதிகளுக்குத் தண்டனை வழங்கும் இடம் போல் இல்லாமல் வசதியாகச் சொகுசாக வாழும் இடமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.