திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரி அளித்த விண்ணப்பத்தை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி தாக்கல் செய்த மனுவில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாகவும், தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் ஏதுமில்லாத நிலையில், மதுரையில் இருந்து காளைகளையும், சிவகங்கையில் இருந்து மாடு பிடி வீரர்களையும் வரவழைத்து வணிக ரீதியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அலகுமலை அடிவாரத்தில் பல ஆண்டுகள் பழைய மரங்களை அகற்றப்படுவதாகவும், கடந்த 2017ம் ஆண்டு அரசாணையின்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து அரசு தான் அறிவிக்க வேண்டும் எனவும் அலகுமலை அவ்வாறு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடமாக அறிவிக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தும் போது உணவகங்கள் அமைக்கப்பட்டு, கழிவுகள் கொட்டப்பட்டு, சுகாதார கேடு ஏற்படுத்துவதாகவும், கிராம மக்களுக்கு எந்த பயனும் தராத இந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு, மனுதாரரின் விண்ணப்பத்தை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.