ஜோர்டன் தலைநகரில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்த மிகப்பெரிய விபத்தில் 14 பேர் பலியான நிலையில் 30 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பின்னர் பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இருதினங்களுக்கு முன்பு ஜோர்டன் தலைநகர் அம்மானில் 4 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து தலைமட்டமானது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கத் தொடங்கினர். இந்தக் கட்டிடம் கிட்டத்தட்ட 14 பேரை பலிவாங்கியது. பல மணி நேரம் போராடிய நிலையில் 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் பச்சிளங்குழந்தை ஒன்றும் இடிபாடுகளில் சிக்கியது தெரியவந்தது. 30 மணி நேரமாக குழந்தையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவந்தனர். 14 பேர் உயிரிழந்த நிலையில் குழந்தையும் இறந்திருக்கக் கூடும் என்றே உறவினர்கள் அச்சத்தில் இருந்தனர்.
எனினும் 30 மணி நேரத்திற்கு பிறகு குழந்தையை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். அப்போது குழந்தை அழும் குரலை கேட்டு பெற்ற தாயும் உறவினர்களும் ஆனந்தக் கண்ணீர் கடலில் மூழ்கினர். அவர் கூறுகையில் ’’ கடவுள்தான் என் குழந்தையை காப்பாற்றி உள்ளார், எப்படி இதை கூறுவது என தெரியவில்லை. நானும் என் குடும்பமும் உறவினர்களும் குழந்தைக்காக வேண்டிக் கொண்டே இருந்தோம். என் குழந்தையை கடவுள் கொடுத்துவிட்டார் ’’ என கண்ணீர் மல்க கூறினார்.