அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையால், தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளில் இனி வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என்றும் குறிப்பாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது சென்னை நகர் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.