மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக முதற்கட்ட ஆளில்லா சோதனை விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து காலை 10 மணிக்கு விண்கலம் ஏவப்பட்டு விண்ணில் பாய்ந்தது.
மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான ககன்யான் திட்ட மாதிரி கலனை டிவி – டி1 ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிமீ தொலைவு வரை அனுப்பி, மீண்டும் அதைப் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டுவந்து வங்கக் கடலில் இறக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ ஈடுபட்டது. பின்னர், கடலிலிருந்து கலன் மீட்கப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கிலோ மீட்டா் உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாகப் பிரிந்துவிடும்.
அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறங்கியது. கடல் நீரில் கலன் விழுந்தவுடன் இந்திய கடற்படையின் சிறப்புக் கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் அதை மீட்டனர். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, விண்ணுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பும் நுட்பம் உறுதி செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ’ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனை வெற்றி. திட்டமிட்டபடி கடலில் மாதிரி விண்கலம் தரையிறங்கியது. வானிலை காரணமாக காலை 8 மணிக்கு விண்கலத்தை ஏவும் சோதனையில் தாமதம் ஏற்பட்டது’ என்று தெரிவித்தார்.