கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியின் விடுதி, அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி சந்தேக மரண வழக்கு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர் சரஸ்வதி, ”கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் விடுதி அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் அல்லது பள்ளி கல்வித்துறையிடம் உரிய அனுமதியில்லாமல் பள்ளி விடுதி இயங்கி வந்துள்ளது. விடுதி சட்டத்தின் படி அது பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்படாத தங்கும் விடுதியில் 24 மாணவிகளை சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தங்க வைத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களை வைத்து விடுதி நடத்தி வரும் ஒவ்வொருவரும் அதனை பதிவு செய்ய வேண்டும். இது அனைவருக்கும் ஒரு பாடம். பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதியாக இருந்தாலும், தனியார் பாதுகாப்பு மையமாக இருந்தாலும், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள விடுதி என எதுவாக இருந்தாலும் அது பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டாலும் சட்டம் 74-ன் படி அவர்களின் அடையாளங்களை எந்த வகையிலும் வெளியிட வேண்டாம் என ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், குழந்தைகளின் முகத்தை மறைத்து தான் ஒளிபரப்ப வேண்டும் என்றும் அதே நேரத்தில் தற்போது கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தின் போது அந்த மாணவியின் பெயரை குறிப்பிட்டு ஹாஷ்டேக் வெளியிட்டது கூட கவலை அளிப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது”.