கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மேலும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுந்தது..
இந்த சூழலில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், பேரிகார்டுகளை உடைத்துக் கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் தீவைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதனிடையே மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி, முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரியைகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் ஹரிப்பிரியா, கிருத்திகாவை பள்ளி ஆசிரியைகளை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்..