கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், மாணவியின் தந்தை ராமலிங்கம் 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும். தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கும் வரை மறுபிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மாணவியின் தந்தை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியிருந்தது.

இதற்கிடையே, மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது வீட்டில் நோட்டீசும் ஒட்டப்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டது நாங்கள் தான் என்றும், உரிய நியாயமான விசாரணையை தமிழக அரசு நடத்தவில்லை என்றும் மாணவியின் தந்தை ராமலிங்கம் குற்றச்சாட்டினார்.
இதையடுத்து நீங்கள் ஏன் உயர்நீதிமன்றத்தில் இவை அனைத்தையும் கூறலாமே? உயர்நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற்று உயர்நீதிமன்றம் செல்லுங்கள் அல்லது வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினர். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்ற கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் வழக்கை திரும்பப் பெற்றார். இதையடுத்து, மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு வீட்டில் போலீசார் நோட்டீஸ் நோட்டீஸ் ஒட்டிய நிலையில், மாணவியின் உடல் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.