மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்பெஷல் ஃபோர்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அரசியலில் அடியெடுத்து வைத்தார். முதன்முதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அந்த தேர்தலில் 2.6% வாக்குகளைப் பெற்றது. அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலிலும் அதே அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்றது. கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் வெறும் 1,728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். தோல்விக்குப் பிறகு மநீமவின் முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக்கட்சிகளில் இணைந்தனர்.
‘விக்ரம்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார். தற்போது, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இணைவதை நோக்கி காய்நகர்த்தி வருகிறார் கமல்ஹாசன். காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் மீண்டும் கூடு திரும்பியுள்ளனர். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று ஆதரவளித்த கமல்ஹாசன், கர்நாடகாவில் காங்கிரஸ் பதவியேற்ற நிகழ்விலும் பங்கேற்றார். இதன் மூலம், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அணியில் மநீம சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில சிறப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் அக்கட்சி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களைக் கூறி கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். ரம்யா வேணுகோபால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மநீம சார்பாக மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் பாதைகள் இப்போது வேறுபட்டுவிட்டன. கனத்த இதயத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி உடனான எனது பயணத்தின் முடிவை அறிவிக்கிறேன். இங்கு நான் இருந்த காலம் முழுவதும், எங்கள் அன்புக்குரிய கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து மக்களுக்காகப் போராடினேன்.
ஊழல் நபர்களால் மக்கள் நீதி மய்யம் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஊழல் நிர்வாகிகள் கொசுக்களைப் போல எங்கும் பரவி இருக்கின்றனர். அவர்கள் தனியாக கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், அவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து செலுத்தும் வைரஸ் இந்தக் கட்சியை மோசமாக்குகிறது. கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் தலைவர்கள் போல் செயல்படவில்லை. தந்திரமான நபர்களால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். பலர் ஒன்று சேர்ந்து ஏமாற்றும்போது என்னைப் போன்ற தனிநபர்கள் இவ்வளவுதான் செய்ய முடியும். அதனால் கனத்த இதயத்துடன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.