கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான, ஜூலை 15ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளில் அவரின் திருவுருவப் படத்தினை அலங்கரித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில், பேச்சுப்போட்டி, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கி ஊக்குவித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, காமராஜர் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் சனிக்கிழமையான இன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.