தமிழ்நாடு முழுவதிலும் கோடை வெயில் முடிவுற்ற நிலையிலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் காணப்பட்டதால் பொதுமக்கள் மிகப்பெரிய அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் தான் நேற்று முதல் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி நேற்று காலை முதலே லேசான மேகமூட்டம் காணப்பட்டது. லேசாக மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் நுழைவாயில் பகுதியில் முழங்கால அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனம் ஓட்டி செல்பவர்களும், ரயில் பயணிகளும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
வேலை நாளான இன்று பல்வேறு பணிகளுக்கு செல்லும் நபர்களும் அதிகாலை நேரத்தில் வெளியூர் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தபடி இருந்தாலும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது மழை பெய்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கணமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.