மதுரையில் இறந்த பெண் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்து 3 நாட்களாக கணவரும், மகன்களும் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலகிருஷ்ணன் (64) அவரது மனைவி மாலதி (55) மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு மகன்களில் மூத்தவர் ஜெய்சங்கர் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், இளையவர் சிவசங்கர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். கடந்த வாரம் மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி நவ.8ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
இதையடுத்து, மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில், மீண்டும் அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் வந்து போலீசார் எச்சரித்த பின்னர், மாலதியின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிற்கு உடலை குடும்பத்தினர் எடுத்துச்சென்றனர்.
போலீசார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.