திருமணமான பெண்ணை கடத்திச் சென்று ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 23 வயது திருமணமான பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன் திடீரென்று காணாமல்போனார். கணவர் குடும்பத்தினர், பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் அப்பெண் கிடைக்கவில்லை. இதனால், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காணாமல்போன அந்தப் பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஆனால், இதற்கு அப்பெண்ணின் பழக்கமே காரணம் என்பதை போலீசார் தெரிந்துகொண்டனர். அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு ஒருநபர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு பேச ஆரம்பித்துள்ளனர். அப்போது, தனது குடும்ப சூழ்நிலை குறித்து அந்த நபரிடம் இப்பெண் புலம்பியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், தனக்கு பெரிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு உள்ளது… காவல்துறையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை அந்தப் பெண் நம்பி சம்மதம் தெரிவித்துள்ளார்.
வேலைத் தொடர்பாக நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக்கூறி அப்பெண்ணை அந்த நபர் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது, அந்த பெண்ணை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ராஜஸ்தானுக்கு கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பேரம் பேசி பெண்ணை விற்றுள்ளனர். அங்கு அந்த நபருடன் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இவை அனைத்தும் அடுத்தடுத்து நடந்துள்ளதால் அப்பெண்ணால் தப்ப முடியவில்லை. இதற்கிடையே, குடும்பத்தின் புகாரின் பேரில் காவல்துறை நடத்திய துரித விசாரணையின் பேரில், பெண்ணின் இருப்பிடம் தெரிந்து அவர் உடனடியாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மட்டும் பிடிபட்ட நிலையில், அவரின் கூட்டாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். திருமணமான பெண்ணை ஒரு கும்பல் வேறு மாநிலத்திற்கு கடத்திச் சென்று ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.