தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு திருமணமான நிலையில், இவரது கணவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் 6 மாதத்தில் கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு, குழந்தையுடன் இளம்பெண் தனியாக இருந்ததால், இதனை நோட்டமிட்ட 2 இளைஞர்கள், வீடு புகுந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
நடந்ததை வெளியில் சொன்னால், குடும்பத்தில் அனைவரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால், சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சில நாட்களாகவே பெண்ணின் முகம் வாடிய நிலையில் இருந்ததால், இதைப்பார்த்த உறவினர்கள், கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவர் ஊர் திரும்பி வந்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான், தன்னை இருவர் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன கணவர், உடனே காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொடூரத்தை செய்தது சாலைப்புதுாரைச் சேர்ந்த மாரியப்பன் (28) என்பவரும், நாகலாபுரத்தைச் சேர்ந்த மாரி செல்வம் (27) என்பது தெரியவந்தது.
இந்த விஷயம் தெரிந்ததும் மாரியப்பன், வீரவாஞ்சி மலைப்பகுதியில் பதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது மாரியப்பன் கீழே விழுந்ததில் வலது கால், கையில் முறிவு ஏற்பட்டது. அதேபோல, புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த மாரிசெல்வத்தையும் போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால், போலீசாரையே அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால், அவரது இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Read More : ’2026 மே வரை பொறுத்திருங்கள்’..!! ’தமிழ்நாட்டை ஆளப் போவது யார் என்பது தெரியும்’..!! ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை