கோவை மாவட்டம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கே வந்திருந்தார்.
மேலும் அவர் கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு செல்லாதது என தெரிவித்த சில பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் இதனை பற்றி மனு கொடுக்க நேரில் வந்திருக்கிறார். அவரிடம் மொத்தம் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பழைய நோட்டுகள் இருந்தன.
அவர் அங்கே கூறியதாவது, என்னுடய பெயர் மாரியம்மாள். நான் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். கணவர் சுந்தர்ராஜ். எங்களுக்கு ஒரே மகன் செந்தில்குமார். இருவருமே இறந்து விட்டனர்.
மகன் செந்தில் குமார் லாரி டிரைவராக இருந்த நிலையில் 2018-ம் ஆண்டு கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே இறந்துவிட்டான்.
சிலநாட்களுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்த போது, மகன் செந்தில்குமார் வைத்திருந்த பை ஒன்றில் சில ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள கடைக்கு சென்ற போது கடைக்காரர் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்து வருகிறேன்.
இந்நிலையில், அருகில் உள்ளவர்கள் இந்த நோட்டுகளை எடுத்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வையுங்கள் என்று தெரிவித்ததால், நான் தற்போது கலெக்டர் அலுவலகம் வந்துள்ளேன்.
கணவர் மற்றும் மகன் இருவரையும் இழந்து தவிக்கும் எனக்கு இப்பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி கண்ணீர் மல்க ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டியின் மனுவை ஏற்று மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.