அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக முக்கிய அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், நாட்டின் முக்கியமான 4 இந்து மடங்களின் சங்கராச்சாரியார்களும் விழாவை புறக்கணித்துள்ளனர். முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலுக்கு இந்து முறைகளை பின்பற்றாமல் குடமுழுக்கு நடத்தப்படுவதாக சங்கராச்சாரியார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கான திறப்பு விழா 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழா இந்து சனாதன தர்மத்திற்கு விரோதமாக நடத்தப்படுவதாக உத்தராகண்ட் ஜோதிஸ்ப்பீடத்தின் சங்கராச்சாரியார் அவின் முக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார். யாருக்கு எதிராகவும் தாங்கள் செயல்படவில்லை என்றாலும் இந்து மத விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதும் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதும் தங்கள் கடமை என்று கூறியுள்ளார்.
முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படுவதும் அங்கு ராமர் சிலையை வைப்பதும் தவறான வழிமுறை என தெரிவித்துள்ளார். மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவை இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இதே போல் இந்து மத வேதங்களுக்கு எதிராக திறப்பு விழா நடைபெறுவதாகவும், இத்தகைய விழாவில் பங்கேற்க தனது கவுரவம் இடம் தராது என்றும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த நிஷ்சலானந்த சர்ஸ்வதியும் குற்றம் சாட்டியுள்ளார்.
உரிய முறைப்படி ராமர் சிலை நிறுவப்படாவிட்டால் அந்த பகுதியே அழியும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மூலம் வருங்காலத்திலும் மத நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் தலையிடுவார்கள் என்றும் தங்களை யோகிகள் என்றும் தர்மாச்சாரியார்கள் என்றும் அரசியல்வாதிகள் விளம்பரம் செய்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.