சிவகங்கையில் நடிகை குஷ்புவின் படத்தை திமுகவினர் எரிக்க முயன்ற போது எம்எல்ஏ-வின் சேலையில் திடீரென தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த பாஜக நிர்வாகியும், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு, “பெண்களுக்கு 1,000 ரூபாய் பிச்சை போட்டுவிட்டால் திமுகவுக்கு ஓட்டுப்போட்டு விடுவார்கள்” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுக மகளிர் அணி சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்க அவர்கள் முயற்சித்தனர். பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் உருவ பொம்மையை மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால் குஷ்புவின் உருவப் படங்களை திமுகவினர் தின்னர் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர். குஷ்புவின் உருவப்படங்கள் எரிக்கப்பட்ட போது அருகில் நின்றிருந்த திமுக எம்எல்ஏ-வான தமிழரசி ரவிக்குமாரின் சேலையில் திடீரென தீ பற்றியது.
இதைக்கண்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள், உடனடியாக சேலையில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Read More : Ration | வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு..!! பெண்களே ரூ.1,000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க ரெடியா..?