சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்பி ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திமுக பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் விவாதப்பொருள் ஆகியுள்ளது. அந்த விவாதப் பொருளுக்கு விடை சொல்லும் நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. ஏனென்றால் சனாதனமும், விஸ்வகர்மா யோஜனாவும் வெவ்வேறு அல்ல. எனக்கு என்ன விந்தையாக இருக்கிறதென்றால், உதயநிதி மென்மையாகத்தான் சொன்னார்.
சனாதனத்தை மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்றார். மலேரியாவையும், டெங்குவையும் சமூகம் அருவருப்பாகப் பார்க்காது. அருவருப்பாகப் பார்க்கும்படி சனாதனத்தைச் சொல்ல வேண்டும் என்றால் ஒருகாலத்தில் தொழுநோய் இருந்தது. பிறகு எச்.ஐ.வி. இருந்தது. சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும் என்று ஆ.ராசா பேசினார்.
சனாதன தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டுமென பிரதமர் கூறுகிறார். அப்படி கடைபிடித்திருந்தால், நீங்கள் இத்தனை வெளிநாடுகளுக்கு சென்றிருக்கக் கூடாது. ஒரு நல்ல இந்து, கடல் கடந்து வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது. உங்களுக்கு ஊர் சுற்றுவதே வேலை. சனாதன தர்மத்தை மீறி ஊர் சுற்றும் ஒரு ஆள், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
நான் பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் சவால் விட்டுள்ளேன். சனாதனம் பற்றி விவாதம் நடத்துங்கள். எங்கள் தலைவரின் அனுமதியோடு சொல்கிறேன். 1 கோடி பேரை டெல்லியில் திரட்டுங்கள். உங்கள் அத்தனை சங்கராச்சாரியார்களையும் மேடையில் உட்கார வையுங்கள். உங்கள் எல்லா ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். நான் வெறும் பெரியார், அம்பேத்கர் புத்தகங்களோடு வருகிறேன். என்னை ஜெயித்துப் பார். நீங்கள் எல்லாம் மகா விஷ்வ குரு.
என்னைக் கேட்டால் இன்னும் கடுமையாகப் பேசுவேன். சனாதனத்திற்கு எதிரான எங்கள் கருத்தை எதிர்த்துப் பேசுவதற்கு உங்கள் தரப்பில் யாராவது ஆள் இருந்தால் டெல்லியில் எங்கு வேண்டுமானாலும் நாள் குறியுங்கள். ஆ.ராசா வருவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்றார்.