லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் சிறப்பு காட்சிகள் 4 மணிக்கு பதில் 7 மாணிக்காவது திரையிடப்படுமா என்றும் ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
லியோ படத்தின் தயாரிப்பு தரப்புடன் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் ரோகினி தியேட்டர் உள்பட சில தியேட்டர்களில் படம் வெளியாகாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை லியோ படம் நாளை காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அகமதாபாத்தில் லியோ படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 12.05 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.