இந்தியா வந்துள்ள தென்கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் யூடியூபர் ஒருவர் இரவில் மும்பையில் லைவ் வீடியோ பதிவு செய்த நிலையில், குறுக்கே புகுந்த இளைஞர்கள் அவரிடம் அத்துமீறி முத்தம் கொடுக்க முயன்று தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்தவர் மியோச்சி. இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு சென்று வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், மியோச்சி இந்தியா வந்துள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தங்கி உள்ளார். அங்குள்ள முக்கிய இடங்களுக்கு அவர் சென்று வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், மியோச்சி இரவு நேரத்தில் மும்பையில் உள்ள சாலையில் நடந்து சென்றபடி வீடியோ எடுத்து வந்தார். அப்போது அவர் ‘லைவ்’ வீடியோ பதிவு செய்தார்.
![பெண் யூடியூபரை முத்தமிட முயன்ற இளைஞர்கள்..!! லைவ் வீடியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/55sou88r-tile-1669882250.jpg)
அந்த சமயத்தில் பைக்கில் 2 இளைஞர்கள் திடீரென்று வந்தனர். மியோச்சியை பார்த்தவர்கள் பைக்கை நிறுத்திவிட்டு அவரிடம் பேசினார்கள். திடீரென்று இளைஞர் ஒருவர் மியோச்சியின் கையை பிடித்து ‘வாங்க பைக்கில் செல்லலாம்’ என இழுத்தார். இதை சற்றும் எதிர்பாராத மியோச்சி ‘வேண்டாம்’ எனக்கூறி அங்கிருந்து அவர்களை விட்டு செல்ல முயன்றார். ஆனால் அந்த இளைஞர் விடவில்லை. பைக்கில் வரும்படி தொடர்ந்து அழைப்பு விடுத்த அந்த நபர் திடீரென்று மியோச்சியின் தோளில் கை வைத்து முத்தமிட முயன்றார். சுதாரித்துக் கொண்ட மியோச்சி அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்துச் சென்றார். இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இரு இளைஞர்களும், ”பைக்கில் வாங்க.. வீட்டுக்கு போகலாம்” எனக்கூறினர். இருப்பினும் மியோச்சி ”வரவில்லை. எனது வீடு இங்கு தான் உள்ளது. நான் சென்று விடுகிறேன்” என தெரிவித்தார்.
![பெண் யூடியூபரை முத்தமிட முயன்ற இளைஞர்கள்..!! லைவ் வீடியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/6efctx23-tile-1669882260.jpg)
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியானது. இந்த சம்பவத்தை பார்த்த பலரும் இளைஞர்குளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இருவரையும் கைது செய்ய வேண்டும் என கூறியதோடு இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மியோச்சி, நடந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கம் மூலம் மும்பை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக விசாரணையை தொடங்கினர். இதையடுத்து மியோச்சியிடம் அத்துமீறிய 2 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் இருவரின் மீதும் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.