ஆதார் கார்டு வைத்திருந்தாலே பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் மூலமாக ரூ.3 லட்சம் வரைக்கும் கடன் உதவி வழங்குவதாக தகவல் பரவிய நிலையில், தற்போது முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் சமூக வலைப்பக்கங்கள் மூலமாக அதிக அளவிலான மோசடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, ஆதார் அட்டை வைத்திருந்தாலே பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் மூலமாக குறைந்தது ரூபாய் மூன்று லட்சம் வரைக்கும் கடன் வழங்கப்படும் என சமூக வலைப்பக்கங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது.
இந்த தகவல் குறித்து ஆய்வு செய்தபோது பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் மூலமாக எந்தவித கடனும் வழங்கப்படவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் இது போன்ற போலியான செய்திகளை நம்பி தங்களது பணத்தை இழக்க வேண்டாம் எனவும், உங்களது ஆதார் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களின் விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் பத்திரிகை தகவல் பணியகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைப்பக்கங்களில் ஏதேனும் தகவல் பரவினால் அந்த தகவல் உண்மையானதா, போலியானதா என்பதனை ஆராயாமலேயே அந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.