மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதே போல் இந்தாண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 26அஅம் தேதி நடைபெறவுள்ளது. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் புகழ்பெற்ற மங்களநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீராம பிரானின் மூதாதையர்களால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் கோயிலில், விலை மதிப்பற்ற பச்சை மரகதக் கல்லினால் ஆன ஆளுயர நடராஜர் சிலைக்கு ஆருத்ரா தரிசன திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
மரகத கல் ஒலி அதிர்வுகளை தாங்காமல் உடைந்து விடும் என்பதால், அந்த சிலை வருடம் முழுவதும் சந்தனம் பூசி காத்து வரப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள், ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் மட்டும் நடராஜர் சிலையின் சந்தனக்காப்பு அகற்றப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பின்னர் ஆருத்ரா தரிசனத்தன்று மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட்டு விடும். பிறகு அடுத்த வருடம் தான் சந்தனக்காப்பு அகற்றப்படும்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு, டிசம்பர் 26ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.