பிரேசிலின் அமேசான் காட்டில், கடந்த 26 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த ஒரு பழங்குடியினத்தின் கடைசி மனிதனும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
பிரேசில்- பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், பழங்குடி மக்கள் பலர் வசித்து வந்தனர். 1970ம் ஆண்டின் தொடக்கத்தில் அப்பகுதியை ஆக்கிரமித்த பண்ணையாளர்களால் அவர்கள் அடித்து விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதில் உயிர் பிழைத்தவர்கள் 7 பேர் மட்டுமே. ஆனால் 1995-ம் ஆண்டு மீண்டும் தாக்கப்பட்டபோது, அதில் 6 பேர் இறந்துவிட்டனர்..
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/93859213-1024x577.jpg)
அந்த பழங்குடியினத்தில் இறுதியாக ஒரே ஒருவர் வாழ்ந்துவந்தார்.. அவர் பள்ளங்களை தோண்டி வைத்து அதன் மூலம் விலங்குகளை வேட்டையாடி வந்தார்.. இதனால் அவர் `Man of the Hole’ என்று அழைக்கப்பட்டார்.. மேலும் ‘உலகின் மிகத் தனிமையான நபா்’ என்று அழைக்கப்பட்டு வந்தாா்.
அடர்ந்த வனத்தில் 26 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த அவர், மிக அரிதாகவே பிறர் கண்களுக்கு புலப்படுவார்.. அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு அவர் மரம் வெட்டும் காட்சியாக இயற்கை ஆர்வலர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்டார்.. வெளிநபர்கள் அவரை பார்த்தது அதுவே கடைசி..
இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக பிரேசிலின் பூர்வீக பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.. ஆகஸ்ட் 23-ம் தேதி அவரின் உடல், காட்டிற்கு நடுவே உள்ள வைக்கோல் குடிசையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.. அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் அது இயற்கை மரணமாகவே கருதப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். சுமாா் 60 வயது இருக்கலாம் என்று கூறப்படும் அவரது உடல், தற்போது உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.